நண்பர்கள் சந்திப்பு 

                    (தாய்லாந்து சுற்றுலா)

கல்லூரி நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு ஐந்து நாட்கள் சுற்றுலா சென்றது பற்றிய பயண அனுபவம்.


           வருடா வருடம் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஜூலை மாதம் இரண்டு நாட்கள் ஏதாவது ஒரு சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை கழிப்பதை  வழக்கமாக கொண்டிருக்கிறோம். எனது கல்லூரியில் 1993 - 1996 வருடம் படித்த நண்பர்கள் சுமார் 30 பேர் ஒன்று சேர்ந்து வருடத்தில் இரண்டு நாட்கள் செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். 

          இதற்க்கெல்லாம் தொடக்க புள்ளியாக இருந்து ஆரம்பித்த நண்பன் அசோக்குமார் இப்போது எங்களுடன் இல்லை என்பது மிக வருத்தமாக இருக்கிறது.  ஆம் 1996 வருடம் கல்லூரி முடிந்து அவரவர் அவர்கள்  வழியில் சென்றுகொண்டு  இருந்தவர்களை 2006 ஆம் வருடம் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நண்பன் அசோக்குமார் தொடர்பில் இருந்த அனைவரையும் அழைத்தான். அங்கே தொடங்கியது தான் இந்த நண்பர்கள் சந்திப்பு பயணம்.  நண்பர்கள் அசோக்குமார், பிரகாஷ் குமார் மற்றும் பாலாஜி ஆகியோர்  முயற்சியினால் தொடர்ந்து  வருடா வருடம் இந்த நண்பர்கள் சந்திப்பு நிகழ்கிறது. 

        2015 ஆம் வருடம் ஊட்டியில் நண்பர் சசி நாராயணன் அவர்களின் காட்டேஜில் தொடங்கியது இந்த நண்பர்கள் சந்திப்பானது. முதல் சந்திப்பில் சுமார் 25 நண்பர்கள் சந்தித்தோம், இரண்டு நாட்கள் ஒரே சிரிப்பலை தான், 19 வருடங்களுக்கு பிறகு சந்திப்பதால் மகிழ்ச்சி அனைவர் முகத்திலும்.

        இரண்டாவது நண்பர்கள் சந்திப்பு கோத்தகிரியில் 2016 ஆம் வருடம் நடந்தது. அந்த சந்திப்புக்கு மட்டும் என்னால் செல்ல முடியாதது வருத்தமளிக்கிறது. 

       மூன்றாவது நண்பர்கள் சந்திப்பானது மசினகுடியில். சுமார் முப்பது நண்பர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்ததில் பதினைந்தே  பேர் தான் பங்கேற்றார்கள். இருப்பினும் இரண்டு நாட்கள் மிக்க மகிழ்ச்சியாக சென்றது. இதில் என்ன விசேஷம் என்றால் அடுத்த சந்திப்பு எங்கே எப்போது யார் முன்னின்று ஏற்பாடுகளை செய்வது என்பதை முந்தய சந்திப்பிலேயே முடிவு செய்து விடுவது தான். ஒரு வருட கால அவகாசம் இருப்பதால் ஒரு இரண்டு நாட்கள் செலவிட முன்கூட்டியே திட்டமிட ஏதுவாகிறது.

  
          நான்காவது சந்திப்பு கொல்லி மலையில், இரண்டு நாட்கள் சுற்றுலா சென்றது போல் இருந்தது 2017ஆம் வருடம் ஜூலை மாதத்தில், இது தான் நண்பன் அசோக் குமார் உடன் சென்ற கடைசி நண்பர்கள் சந்திப்பு, ஆகாய கங்கை, அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், போன்ற இடங்களை சுற்றி பார்க்க வாய்ப்பாக அமைந்தது.


         ஐந்தாவது நண்பர்கள் சந்திப்பு 2018ஆம் வருடம் சென்னையில்  நண்பர் வி.பி பழனிச்சாமி, வீரராகவன் மற்றும் ஆண்டவன் உதவியுடன் (உதவினர்களா என்று தெரியவில்லை) ஒரு உல்லாச போக்கிடத்தில் இரண்டு நாட்கள் மிகவும் சந்தோசமாக கழிந்தது.  32 நண்பர்கள்  இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள். நண்பன் சிவகுமார் ஆகாய விமானத்தில் பறந்து வந்து கலந்து கொண்டது சிறப்பு. கடற்கரை காற்று, உல்லாச போக்கிட நீச்சல் குளம், முட்டுக்காடு படகு இல்லம், மாயாஜால் போன்ற இடங்கள் சென்றது மகிழ்ச்சி. நண்பர் பழனிச்சாமி ஏற்பாடு செய்திருந்தது மிக சிறப்பாக இருந்தது. இங்கு தான் அந்த ஆறாவது நண்பர்கள் சந்திப்பு பற்றி அறிவிப்பை நண்பர் பழனிச்சாமி அறிவித்தார். அசோக்குமார் பற்றிய நினைவலைகள் அனைவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிந்தது. 


      ஆறாவது நண்பர்கள் சந்திப்பு கூட்டம் 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் என்றும் அதுவும் அசோக்குமார் நினைவாக நண்பர் பழனிச்சாமி எத்துனைபேர்  வந்தாலும் அனைவரையும் தாய்லாந்து அழைத்து செல்வதாக அறிவித்தது தான் மிக மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் விமான கட்டணம், போக்குவரத்து, தங்குமிடம் அனைத்துக்கும் ஆகும் செலவை அவரே ஏற்றுக்கொள்வதாக கூறியது என்பது யாரும் செய்ய இயலாத செயல்.
சொல்லிய படியே  கவனமுடன் அந்த  நாள் முதல் கடவுச் சீட்டு எடுப்பதில் இருந்து மிகவும் அக்கறையாக  ஒவ்வொருவரையும் தனித்தனியே பின்தொடர்ந்து ஊக்குவித்து தொடர் பின்பற்றலில் இருந்தது எனக்கு மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. 2018 ஆகஸ்ட் மாதமே நான் கடவுச் சீட்டு விண்ணப்பித்து 15 நாட்களில் பெற்றுவிட்டேன்.
ஒரு சிலர் கடவுச்சீட்டு வைத்து இருந்தனர். பலர் விண்ணப்பித்து பெற்றனர். கடைசியாக  14 பேர் மற்றுமே பயணம் செய்ய முடிந்தது. அதிலும் உரிய அனுமதி பெற நான் கடைசி நாள் வரை மிகவும் சிரமப்பட்டு தான் அனுமதி பெற முடிந்தது.  அதைவிட நண்பர் ஜெயபால் துபாய்ல் இருந்து விமானம் மூலம் கேரளா வந்து கேரளாவில் இருந்து சென்னை விமான நிலையம் வர திட்டமிட்டிருந்தார் ஆனால் மழையின் காரணமாக  விமானம் டெல்லி திருப்பி விடப்பட்டு கடைசி வரை அவர் வருவாரா வரமாட்டாரா என்று சந்தேகத்தில் இருந்தோம். கடைசியில் நாங்கள் செல்லவேண்டிய சென்னை டு பாங்காக் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்.

சென்னை விமான நிலையம் : 10.08.2019

9 ஆம் தேதி இரவே நான் எனது மனைவி மற்றும் மகனுடன் சென்னை சென்றடைந்து விட்டோம், 10ஆம் தேதி காலையில் எனது மனைவியின் சகோதரி குடும்பத்தினருடன் வண்டலூர் விலங்கியல் பூங்காவுக்கு சென்று அங்கு மாலை வரை அனைத்து விலங்குகளையும் பார்த்து மகிழ்ந்தோம், எனது மகன் வர்சன் (3 வயது) விலங்குகளை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். 9ஆம் தேதி மாலை நேராக வண்டலூரிலிருந்து எனது நெருங்கிய வகுப்பு தோழன் வீர ராகவன் வீட்டிற்கு சென்று அங்கிருந்து இருவரும் சென்னை விமான நிலையம் சென்றோம். நண்பன் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அனைவருக்கும் இனிப்பு வாங்கி சென்றோம் ( வாங்கியதை வழியில் விட்டுவிட்டு மீண்டும் வேறு வாங்கினோம் அது வேறு கதை) மெட்ரோ ரயிலில் பயணித்து நண்பர்களுக்கு முன்பாக நேரே பன்னாட்டு விமான நிலையத்திற்குள் சென்று விட்டோம். நண்பர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு வெளியில் நின்று புகைப்படம் எடுத்து குழுவில் பதிவிட்டதை பார்த்தபோது அட நாமும் அவர்களுடன் வெளியில் நின்று சேர்ந்தே உள்ளே வந்து இருக்கலாம் என்று தோன்றியது.

        இரவு 10.50 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 1 மணி நேரம் தாமதமாக கிளம்பியதால் துபாய் ஜெயபால் எங்களுடன் கடைசி நிமிடத்தில் டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். சரியான நேரத்தில் விமானம் புறப்பட்டு இருந்தால் துபாய் ஜெயபால் எங்களுடன் வந்து சேர்ந்திருக்க முடியாது. ஆக சரியாக 12.00 மணிக்கு விமானம் புறப்பட்டது. 1. வேலுசாமி, 2. வீரராகவன், 3. பழனிச்சாமி 4. தினேஷ்குமார் 5. பிரகாஷ்குமார் 6. சரவணன் 7. சக்திவேல் 8. கோடீஸ்வரன் 9. மலர்வண்ணன் 10. HDFC ஜெயபாலன் 11. அருள்ப்ரகாஷ் 12. ஆடிட்டர் செந்தில்குமார் 13. பிரபு 14. துபாய் ஜெயபாலன் என மொத்தம் பதினான்கு நண்பர்கள் 11.08.2019 ஆம் தேதி பாங்காக் பன்னாட்டு விமான நிலையம் அதிகாலை 4.30 மணி அளவில் சென்றடைந்தோம்.

 
Image result for bangkok image



      நமக்கும் தாய்லாந்துக்கும் நேர வேறுபாடு + 1.30 மணி அதாவது இங்கு காலை 6 மணி என்றால் அங்கு 7.30 மணி. நண்பர் பழனிச்சாமி ஏற்கனவே பலமுறை தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார் என்பதால் சென்னையில் இருந்தே அங்குள்ள நண்பர்கள் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் ( போக்குவரத்து, தங்குமிடம், சுற்றிப்பார்த்தால்) என அனைத்தையும் முன்னேற்பாடாக செய்துவைத்து இருந்தார். 11.08.2019 அன்று பாங்காக் இல் இருந்து மகிழ்வுந்து மூலம் காலை 8 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு பட்டாயா சென்றடைந்தோம். இடையில் சிற்றுண்டி முடித்து விட்டு சென்றோம்.

Image result for pattaya city

மதியம் நாங்கள் தங்கும் விடுதிக்கு அருகில் இருந்த ஒரு பஞ்சாபி உணவு விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அன்று ஓய்வு எடுத்தோம். பிறகு மாலையில் பட்டாயா சிட்டியை சுற்றிப்பார்த்தோம். இரவு கடற்கரைக்கு சென்று கடலை சாப்பிட்டு கொண்டே கடற்கரை மணலில் சற்று அளவளாவி விட்டு விடுதிக்கு தூங்க சென்றோம்.

12.08.2019 காலை சுமார் 8.30 மணிக்கு நாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே காலை உணவை முடித்துவிட்டு, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல் பயணத்திற்கு புறப்பட்டு சென்றோம். பாராசையிலிங் எனும் படகில் இருந்து அந்தரத்தில் பறக்கவிடும் செயல் நன்றாக இருந்தது. அடுத்து அங்கிருந்து அதே கப்பலில் சிறிது தூரம் கடல் பயணத்திற்கு பிறகு கடலுக்கு அடியில் நடந்து சென்று நிழற்படம் எடுத்துக்கொண்டோம், பிறகு கோரல் ஐலந்து என்னும் தீவிற்கு கூட்டி சென்றார்கள். அங்கெ ஜெட்ஸ்கி மற்றும் பனானா போட் விளையாட்டு நன்றாக இருந்தது.

சுமார் ஒரு மணிநேரம் கடலிலேயே விளையாடிவிட்டு மீண்டும் கப்பலில் புறப்பட்டோம், கப்பலில் மதிய உணவு பரிமாறப்பட்டது , பிறகு கப்பலில் ஆச்சர்யமாக போம்  டான்ஸ் ஏற்பாடு செய்து இருந்தார்கள், நன்றாக அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடினோம். பிறகு  புகைப்படம் எடுத்துக்கொண்டு களைப்புடன் விடுதி சென்று ஓய்வெடுத்தோம்.

13.08.2019 அன்று காலையிலேயே கிளம்பி ஸ்ரீராச்சா டைகர் ஜூ சென்றோம், அங்கும் டைகர் ஷோ, எலிபன்ட் ஷோ, பிக் ஷோ மற்றும் கோரக்கடைல் ஷோ பார்த்தோம், அனைவரும் ஆர்வமுடன் புலிக்குட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
மதிய உணவு முடித்து விட்டு மாலையில் அல்கஸார் ஷோ என்னும்  வேர்ல்ட் பேமஸ் டான்ஸ் ஷோ பார்த்தோம். இரவு பஞ்சாபி உணவு விடுதியில் இரவு உணவு எடுத்துக்கொண்டோம். பஞ்சாபி ஹோட்டல் உரிமையாளர் தமிழ் பாடல்களை ஒலிக்க செய்து நண்பர்கள் அனைவரையும் உட்சாகபடுத்தினர்.

14.08.2019 அன்று ப்ளோட்டிங் மார்க்கெட் சென்றோம் படகிலேயே மார்கெட்டிற்கு சென்று சுற்றி பார்த்தோம். மாலை இரவு உணவிற்க்காக அதே பஞ்சாபி உணவகத்தில் சாப்பிட்டோம். இடையில் ரகசியமாக இரண்டு நாட்களாக திட்டமிட்டு நண்பர் பழனிச்சாமிக்கு ஒரு பரிசு வாங்கி அவருடைய பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி பரிசளிக்க வேண்டி அதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் செய்தார்கள். இரவு உணவுக்கு செல்லும் அதே பஞ்சாபி உணவு விடுதியில் தனியாக ஒரு ஹால் ஏற்பாடு செய்து அந்த ஹாலில் பழனிச்சாமி பிறந்தநாள்  கேக் வெட்டி கொண்டாடினோம்.

15.08.2019 காலை சிற்றுண்டி முடித்துவிட்டு விடுதியில் இருந்து பாங்காக் நோக்கி புறப்பட்டோம் வழியில் ஒரு புத்தர் கோவிலுக்கு சென்றோம்.  Image result for Wat Mahathat Yuwaratrangsarit
        பிறகு பாங்காக் இல் அவரவர்க்கு தேவையான பொருள்களை வாங்க இந்திரா மார்க்கெட் எனும் இடத்திற்கு சென்று வாங்கிவிட்டு அங்கேயே மதிய உணவு அருந்தினோம். நமது தூத்துகுடிகாரர் ஒருவர் ஹோட்டல் வைத்துள்ளார். ஹோட்டலில் வேலை செய்யும் தமிழ் நண்பர் ஒருவர் கூட நம் நண்பர்களுக்கு பொருள்கள் வாங்க உதவினார். பாங்காக் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்பட தயார் ஆனோம். இடையில் தேவையான பொருட்கள் வாங்கியதால் சாமான்கள் கூடுதல் எடையானதால் கூடுதல் கட்டணத்தை தவிர்க்க முடியவில்லை.  இரவு 10.50 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தோம். அவரவர் ஊருக்கும் அவரவர் வேலைக்கும் பிரிந்து சென்றோம்.

       ஐந்து நாட்கள் ஐந்து நிமிடங்கள் சென்றது போல் இருந்தது.
       மனம் நிறைந்த மகிழ்வுடன் அனைவரும் அவரவர் இல்லம் சென்று சேர்ந்தோம்.

 நன்றி.

Image result for vanakkam symbol



Popular posts from this blog

Magic of Learning.......

Change